Saturday, October 31, 2009

இரண்டு இசையமைப்பாளர்கள் - I

கடந்த ஆண்டு (என்ன ஒரு சோம்பேறித்தனம்!) தமிழ் திரையில் கவனிக்கத்தக்க மூன்று இசையமைப்பாளர்கள் அறிமுகமானார்கள். ஜேம்ஸ் வசந்தனின் வெற்றியின் பூதாகாரமான சாயையில் மறைந்தும் ஒளிவிடும் இசைமுகங்களைப் பற்றி இங்கே...

எஸ்.எஸ்.குமரன் ( திரைப்படம் : பூ ) :
இவரது வரலாறு, பூகோளம் எதுவும் தெரியவில்லை.. இவரது அதிகாரப்பூர்வ வலைமனையில்கூட தான் ஒரு திரைப்பட கல்லூரி பட்டதாரி என்ற செய்தி மட்டுமே தந்திருக்கிறார். ஆனால் நம்பிக்கையூட்டும் அறிமுகம். அடுத்த படத்தைஎதிர்பார்க்க வைத்து விட்டார்..

பூ, 'மாரி' என்ற பெண்ணின் unconditional love (நிபந்தனையற்ற காதல் ? நிபந்தனையற்ற ஜாமீன் மாதிரி இருக்கிறது..) பற்றி பேசும் படம்...தமிழ்செல்வனின் 'வெயிலோடு போய்' என்ற சிறுகதையை அடிப்படையாகக்கொண்டது... அப்படத்தில் எனக்கு பிடித்த சில பாடல்கள் இங்கே..

சூ சூ மாரி - தமிழ் திரையில் குழந்தைகள் பாடல் மிகக் குறைவு. கடைசியாக கேட்ட குழந்தைகள் பாடலை நினைவு கூற முடியவில்லை. பாடலின் வெற்றியைப் பற்றி சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன்...
பாடலின் எளிமையான மெட்டும், குதூகலமான வரிகளும் இந்தப் பாடலை எல்லாக் குழந்தைகளிடமும் கொண்டு சேர்த்தது...

ஆவாரம்பூ - இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அருமையானவரிகள்.."சொந்த வேரோடு, தான் கொண்ட காதலினை.. " என்ற சொல்லாட்சி மிகவும் கவர்ந்தது. எனக்குப் பிடித்த 'சின்மயி' பாடிய இந்தப் பாடலில்அற்புதமான ஒரு தலைக் காதலும் சோகமும் பின்னப்பட்டுள்ளது.. கிட்டதிட்ட முழுப் பாடலும் (குரல் மட்டும்) மிகக் குறைவாக 'punch' பண்ணப்பட்டு பதிவு செய்யப்பட்டது என்று நினைக்கிறேன். வாத்தியத் தேர்விலும் ஒருங்கிணைப்பிலும் நம்மை கவர்கிறார் குமரன். மின்னணு கருவிகள் (synthesizer) உபயோகித்திருந்தாலும் கிராமத்து மணம்மாறாப் பாடல்.

சிவகாசி ரதியே! - சமகால படங்களில் வரும் குத்து பாடல் அல்ல இது. அசலான கிராமிய மெட்டு. மேளத்திலும், வார்த்தைகளிலும் நல்ல நையாண்டி..உண்மையான கிராமத்து இசை.. தவிலும் நாயனமும் கேட்டு எத்தனை நாளாயிற்று.. பெரிய கருப்ப தேவரின் குரல் உற்சாகத்தையும் சோகத்தையும் எளிதாக பிரதிபலிக்கக் கூடிய ஒன்று.. நன்றாக இந்தப் பாடலில்அவரது குரல் பயன்பட்டிருக்கிறது..

மாமன் எங்கிருக்கான் - மனிதனுக்கு, காப்பியோ காதலோ கொஞ்சம் 'பால்' வேண்டும். 'மாரி'யின் பால் சார்ந்த எண்ணங்களை பேசும் பாடல். folk based- ஆக இருந்தாலும் சற்று சினிமாத்தனமானப் பாடல் என்றே சொல்வேன். சுவாரசியமான வாத்திய இசை, மற்றும் பாடிய 'ஹரிணி', இந்தப் பாடலைக் கேட்கவைக்கிறார்கள். ஆண் குரலில், 'ஒருவருக்காக' கார்த்திக்கும் திப்புவும் ஏன் மாறிமாறிப் பாடுகிறார்கள் என்று படம் பார்த்த பின்னும் புரியவில்லை...


செல்வகணேஷ் (திரைப்படம்: வெண்ணிலா கபடிக் குழு) :

செல்வகணேஷ் இசை உலகிற்கு புதியவர் அல்ல. Grammy வென்ற கடம் வித்துவான் விக்கு விநாயகராமின் மகன். கஞ்சிரா கலைஞர் , பன்னாட்டு இசை கலைஞர்களுடன் சேர்ந்து சில fusion இசை தொகுப்புகளை வெளியிட்டவர். இவரது முதல் திரை முயற்சி இது...

லேசா பறக்குது - கிராமத்து பின்னணியில் அமைந்த இந்த படத்தில், காதல் பாடல்களில் இது ஒன்றே கிராமிய மணம் கொண்டது. இனிமையான பாடல். முதல் முறை கேட்டதிலேயே ஈர்த்த விஷயம், கடத்தின் அழகான பயன்பாடு. கடத்துடனே வளர்ந்தவர் என்றாலும் மிக gentle-ஆக உபயோகித்திருப்பது பாராட்டிற்குரிய விஷயம். 'சின்மயி' (மீண்டும்), மற்றும் கார்த்திக் பாடிய இப்பாடலில் உண்மையிலேயே மனசு லேசாகப் பறக்கத்தான் செய்கிறது.
நல்ல வாத்திய தேர்வு மற்றும் சேர்க்கை. அதிலும், இரண்டாவது சரணத்தில் வரும் piano backup அருமை.

படபடவென - மற்றுமொரு சுகமான பாடல். நல்ல வரிகள். செல்வகணேஷ் ஒரு தாள வாத்தியக் கலைஞராகையால், தனக்கே உரிய பிரத்தியேகமான rythm arrangement பாணியை அமைத்துள்ளார். உதாரணத்துக்கு, இந்தப் பாடலில் கஞ்சிராவின் அளவான அழகான இசைப்பை குறிப்பிடலாம்.

தான் ஒரு fusion இசை கலைஞர் என்பதை, வந்தனம் வந்தனம் பாடலிலும் கபடி கபடி பாடலிலும் நிரூபிக்கிறார் செல்வகணேஷ். வந்தனம் வந்தனம் ஒரு திருவிழாப் பாடல். கேட்டவுடன் பருத்திவீரன் hangover போல் இருந்தாலும், நாயகன் நாயகி பார்வை பரிமாற்றங்களின்போது, பாடல் சடாரென்று மேற்க்கத்திய இசை சார்ந்த காதல் பாடலாக மாறுவது ஒரு இனிய அதிர்ச்சி. ஹரிசரண் பாடியுள்ள உயிரிலே ஏதோ தற்போதய trend-ல் உள்ள ஒரு நல்ல காதல் பாடல். படத்தின் முக்கியமான அம்சம் செல்வகணேஷ்-இன் அழகான ரசிக்கப்படவேண்டிய பின்னணி இசை.

ஆகமொத்தத்தில், இவ்விரு இசையமைப்பாளர்களின் அடுத்த படைப்புகளில் இனிய இசையையும் புதுமையையும் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

2 comments:

  1. how about the guy who composed for Yaavarum Nalam. It was wonderful.

    ReplyDelete
  2. @jamsheed
    yaavarum nalam's BGM was by newcomers tubby-parik, but the songs r by shankar-ehsaan-loy..
    moreover, yaavarum nalam is a 2009 movie.the blog is about 2008 movies...
    sorry..naan konjam late.

    ReplyDelete