Monday, July 5, 2010

கேட்க வேண்டிய ஒரு பாடல்...

எழுதுவதற்கு உந்துதல் இல்லாமல் வெகுநாட்களாய் இருந்தேன்.. இந்தப் பாடல் என்னை எழுத வைத்தது..
என்னைப் போன்ற ஒரு சோம்பேறியை கூட தட்டி எழுப்பியப் பாடல், சிறந்த பாடலாகத்தான் இருக்க முடியும்.. (இப்போதெல்லாம், தமிழில் ஏன் இப்படி நல்ல பாடல்கள் வருவதில்லை?)
கொஞ்ச காலமாகவே ஹிந்தியில் உள்ள நல்ல பாடல் வரிகளை தமிழில் தர வேண்டும் என்ற எண்ணத்திற்கு முதல் புள்ளி வைக்கும் விதமாக இந்த பாடலில் இருந்து தொடங்க உத்தேசித்திருக்கிறேன்..
..

பாடல் : இக்தாரா..
படம் : Wake up Sid (2009)
இசை : அமித் த்ரிவேதி ( ஹிந்தி இசையின் வருங்காலம் இவர்)
வரிகள் : ஜாவித் அக்தர்.
பாடகர் : கவிதா சேத் (இவர் ஒரு சூபி பாடகி)

பாடல் பின்புலம் :
wake up Sid ஒரு Coming of Age திரைப்படம்.. கல்லூரியில் இருந்து கனவுகளோடு வெளியே வரும் ஒரு இளைஞனின் கதை. Sidharth-க்கு சிறந்த புகைப்பட கலைஞர் ஆக வேண்டும் என்று விருப்பம். தந்தையோ அவனை தொழில் வாரிசாக ஆக்க வேண்டிய பயிற்சிகளில் ஈடுபடுத்துகிறார். தந்தையுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியே வரும் sidhaarth-க்கு கிடைக்கும் நட்பு, அவன் கனவுகளை நோக்கி இட்டு செல்கிறது..
இந்த சமயத்தில் வரும் பாடல்தான் இது...

O re manwa tu to bawra hai..
Tu hi jaane tu kya sochta hai..
Tu hi jaane tu kya sochta hai... Baware
Kyun dikhaye sapne tu sote jaagte

Jo barsein sapne boond boond...
Nainon ko moond moond...
Nainon ko moond moond...
Jo barsein sapne boond boond...
Nainon ko moond moond..

Kaise main chaloon,
Dekh na sakoon,
Anjaane raaste..

Goonja sa hai koi iktara iktara..
Goonja sa hai koi iktara..
Goonja sa hai koi iktara iktara..
Goonja sa hai koi iktara..

Dheemi bole koi iktara iktara..
Dheemi bole koi iktara...
Goonja sa hai koi iktara iktara...
Goonja sa hai koi iktara..

மொழியாக்கம் :
ஓ மனமே, நீ கொஞ்சம் பைத்தியம்..
உனக்கு மட்டுமே தெரியும் உன் எண்ணங்கள்...
உனக்கு மட்டுமே தெரியும் உன் எண்ணங்கள்.... பைத்தியமே...
ஏன் காட்டுகிறாய் கனவுகளை, உறக்கத்திலும் விழிப்பிலும்?

கனவின் வழியும் துளிகள் துளிகள்..
நிறைக்கிறது கண்ணை...
கனவின் வழியும் துளிகள் துளிகள்..
மறைக்கிறது கண்ணை...

பார்க்க முடியவில்லை...
எப்படி செல்வேன்
தெரியாத பாதையில்.........?

எங்கேயோ ஒரு தம்புரா ரீங்கரிக்கிறது...
எங்கேயோ ஒரு தம்புரா ரீங்கரிக்கிறது...
எங்கேயோ ஒரு தம்புரா மெதுவாய் பேசுகிறது..
எங்கேயோ ஒரு தம்புரா ரீங்கரிக்கிறது.....

'இக்தாரா' என்பது ஒரு கம்பி மட்டுமே உள்ள இசை கருவி (மீரா கையில் இருப்பது)... அதற்கு தமிழில் என்ன என்று தெரியாததால் 'தம்புரா' வை இசைக்க வேண்டியதாக போயிற்று.. :-) .
எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் என்பதுபோல் மொழியாக்கத்தில் சில சுதந்திரங்கள் எடுத்துக் கொண்டுள்ளேன்.. பொறுத்தருள்க.

நானும் Sidhaarth-ஐ போல கண்ணை மறைக்கும் கனவுகளோடு, தெரியாத பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.... ஒரு தம்புராவின் ரீங்காரம் வேண்டி......

Saturday, October 31, 2009

இரண்டு இசையமைப்பாளர்கள் - I

கடந்த ஆண்டு (என்ன ஒரு சோம்பேறித்தனம்!) தமிழ் திரையில் கவனிக்கத்தக்க மூன்று இசையமைப்பாளர்கள் அறிமுகமானார்கள். ஜேம்ஸ் வசந்தனின் வெற்றியின் பூதாகாரமான சாயையில் மறைந்தும் ஒளிவிடும் இசைமுகங்களைப் பற்றி இங்கே...

எஸ்.எஸ்.குமரன் ( திரைப்படம் : பூ ) :
இவரது வரலாறு, பூகோளம் எதுவும் தெரியவில்லை.. இவரது அதிகாரப்பூர்வ வலைமனையில்கூட தான் ஒரு திரைப்பட கல்லூரி பட்டதாரி என்ற செய்தி மட்டுமே தந்திருக்கிறார். ஆனால் நம்பிக்கையூட்டும் அறிமுகம். அடுத்த படத்தைஎதிர்பார்க்க வைத்து விட்டார்..

பூ, 'மாரி' என்ற பெண்ணின் unconditional love (நிபந்தனையற்ற காதல் ? நிபந்தனையற்ற ஜாமீன் மாதிரி இருக்கிறது..) பற்றி பேசும் படம்...தமிழ்செல்வனின் 'வெயிலோடு போய்' என்ற சிறுகதையை அடிப்படையாகக்கொண்டது... அப்படத்தில் எனக்கு பிடித்த சில பாடல்கள் இங்கே..

சூ சூ மாரி - தமிழ் திரையில் குழந்தைகள் பாடல் மிகக் குறைவு. கடைசியாக கேட்ட குழந்தைகள் பாடலை நினைவு கூற முடியவில்லை. பாடலின் வெற்றியைப் பற்றி சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன்...
பாடலின் எளிமையான மெட்டும், குதூகலமான வரிகளும் இந்தப் பாடலை எல்லாக் குழந்தைகளிடமும் கொண்டு சேர்த்தது...

ஆவாரம்பூ - இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அருமையானவரிகள்.."சொந்த வேரோடு, தான் கொண்ட காதலினை.. " என்ற சொல்லாட்சி மிகவும் கவர்ந்தது. எனக்குப் பிடித்த 'சின்மயி' பாடிய இந்தப் பாடலில்அற்புதமான ஒரு தலைக் காதலும் சோகமும் பின்னப்பட்டுள்ளது.. கிட்டதிட்ட முழுப் பாடலும் (குரல் மட்டும்) மிகக் குறைவாக 'punch' பண்ணப்பட்டு பதிவு செய்யப்பட்டது என்று நினைக்கிறேன். வாத்தியத் தேர்விலும் ஒருங்கிணைப்பிலும் நம்மை கவர்கிறார் குமரன். மின்னணு கருவிகள் (synthesizer) உபயோகித்திருந்தாலும் கிராமத்து மணம்மாறாப் பாடல்.

சிவகாசி ரதியே! - சமகால படங்களில் வரும் குத்து பாடல் அல்ல இது. அசலான கிராமிய மெட்டு. மேளத்திலும், வார்த்தைகளிலும் நல்ல நையாண்டி..உண்மையான கிராமத்து இசை.. தவிலும் நாயனமும் கேட்டு எத்தனை நாளாயிற்று.. பெரிய கருப்ப தேவரின் குரல் உற்சாகத்தையும் சோகத்தையும் எளிதாக பிரதிபலிக்கக் கூடிய ஒன்று.. நன்றாக இந்தப் பாடலில்அவரது குரல் பயன்பட்டிருக்கிறது..

மாமன் எங்கிருக்கான் - மனிதனுக்கு, காப்பியோ காதலோ கொஞ்சம் 'பால்' வேண்டும். 'மாரி'யின் பால் சார்ந்த எண்ணங்களை பேசும் பாடல். folk based- ஆக இருந்தாலும் சற்று சினிமாத்தனமானப் பாடல் என்றே சொல்வேன். சுவாரசியமான வாத்திய இசை, மற்றும் பாடிய 'ஹரிணி', இந்தப் பாடலைக் கேட்கவைக்கிறார்கள். ஆண் குரலில், 'ஒருவருக்காக' கார்த்திக்கும் திப்புவும் ஏன் மாறிமாறிப் பாடுகிறார்கள் என்று படம் பார்த்த பின்னும் புரியவில்லை...


செல்வகணேஷ் (திரைப்படம்: வெண்ணிலா கபடிக் குழு) :

செல்வகணேஷ் இசை உலகிற்கு புதியவர் அல்ல. Grammy வென்ற கடம் வித்துவான் விக்கு விநாயகராமின் மகன். கஞ்சிரா கலைஞர் , பன்னாட்டு இசை கலைஞர்களுடன் சேர்ந்து சில fusion இசை தொகுப்புகளை வெளியிட்டவர். இவரது முதல் திரை முயற்சி இது...

லேசா பறக்குது - கிராமத்து பின்னணியில் அமைந்த இந்த படத்தில், காதல் பாடல்களில் இது ஒன்றே கிராமிய மணம் கொண்டது. இனிமையான பாடல். முதல் முறை கேட்டதிலேயே ஈர்த்த விஷயம், கடத்தின் அழகான பயன்பாடு. கடத்துடனே வளர்ந்தவர் என்றாலும் மிக gentle-ஆக உபயோகித்திருப்பது பாராட்டிற்குரிய விஷயம். 'சின்மயி' (மீண்டும்), மற்றும் கார்த்திக் பாடிய இப்பாடலில் உண்மையிலேயே மனசு லேசாகப் பறக்கத்தான் செய்கிறது.
நல்ல வாத்திய தேர்வு மற்றும் சேர்க்கை. அதிலும், இரண்டாவது சரணத்தில் வரும் piano backup அருமை.

படபடவென - மற்றுமொரு சுகமான பாடல். நல்ல வரிகள். செல்வகணேஷ் ஒரு தாள வாத்தியக் கலைஞராகையால், தனக்கே உரிய பிரத்தியேகமான rythm arrangement பாணியை அமைத்துள்ளார். உதாரணத்துக்கு, இந்தப் பாடலில் கஞ்சிராவின் அளவான அழகான இசைப்பை குறிப்பிடலாம்.

தான் ஒரு fusion இசை கலைஞர் என்பதை, வந்தனம் வந்தனம் பாடலிலும் கபடி கபடி பாடலிலும் நிரூபிக்கிறார் செல்வகணேஷ். வந்தனம் வந்தனம் ஒரு திருவிழாப் பாடல். கேட்டவுடன் பருத்திவீரன் hangover போல் இருந்தாலும், நாயகன் நாயகி பார்வை பரிமாற்றங்களின்போது, பாடல் சடாரென்று மேற்க்கத்திய இசை சார்ந்த காதல் பாடலாக மாறுவது ஒரு இனிய அதிர்ச்சி. ஹரிசரண் பாடியுள்ள உயிரிலே ஏதோ தற்போதய trend-ல் உள்ள ஒரு நல்ல காதல் பாடல். படத்தின் முக்கியமான அம்சம் செல்வகணேஷ்-இன் அழகான ரசிக்கப்படவேண்டிய பின்னணி இசை.

ஆகமொத்தத்தில், இவ்விரு இசையமைப்பாளர்களின் அடுத்த படைப்புகளில் இனிய இசையையும் புதுமையையும் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.